Saturday 8 March 2014

பிக்சல் - துல்லியங்களின் மையம்!!! நெய்வேலி பாரதிக்குமார்.


Pixel Book review in ”Pudhiya Puthagam Pesuthu” by Writer Neyveli BharathiKumar! Thanks a lot for the in depth write up sir!

பிக்சல் - துல்லியங்களின் மையம்!!!

நெய்வேலி பாரதிக்குமார்.

தமிழர்களின் நுட்பமான மருத்துவ அறிவு, அறிவியல் ஆற்றல், கலைநுட்பத் திறன்கள் போன்றவை அதனதன் காலத்தில் எழுத்து வடிவம் பெறாமல் போனதன் காரணமாக நாம் இழந்தவை ஏராளம். ஷேக்ஸ்பியரின் காலத்தில் அவரது நாடகங்கள் அரங்கேற்றப் படும்போது திரைச்சீலைகள் நடைமுறையில் இல்லையாம். இதனால் ஒரு காட்சி முடிந்தபின் மற்றொரு காட்சி துவங்குவதற்கான இடைவெளியில் விளக்குகளை ஊதி அணைத்து விடுவார்களாம். பின்னர் காட்சி துவங்கியதும் விளக்கேற்றப் படும். ஒரு காட்சியின் நடுவே ஒருவர் இறந்து விட்டதாக காண்பிக்கப்பட்டால், அதற்குப் பிறகு அவரைத் தூக்கிச் செல்வதுபோல் அந்த நாடகத்தில் காட்சி இருந்தே ஆக வேண்டும். ஏனென்றால் காட்சி மாறுவதற்காக ஒவ்வொரு முறையும் விளக்குகளை அணைப்பது கடினமான ஒன்று என்பதால்.

ஆனால், தமிழகத்தில் சேர,சோழ, பாண்டியர் காலத்திலேயே நாடக அரங்குகளில் ஏழுவகையான திரைச்சீலைகள் பயன்படுத்தப்பட்டதாக சிலப்பதிகாரத்தில் பதியப் பட்டிருக்கிறது. இன்றைக்கு இது மிக எளிமையான விஷயம் தான் என்றாலும், எந்தவொரு கலை வடிவாக இருப்பினும், அதில் தொழில்நுட்ப உத்திகளை பயன்படுத்துவதில் எப்பொழுதும் நாம் முன்னின்று இருக்கிறோம். ஆனால், அந்த நுட்பங்களையும் உத்திகளையும் எப்படிப் பயன்படுத்தினோம் அல்லது எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை பதிவு செய்யாமல் விட்டிருக்கிறோம். ஒரு தொழில்நுட்பம் அறிமுகமாகும் அதே தருணத்தில் அதன் நுட்பங்கள் பற்றிய அறிவு போதிக்கப் பட வேண்டும்.

திரைப்படம் என்பது வெறும் கேளிக்கை அல்ல. படைப்பாக்கம், தொழில்நுட்பம், கலைத்திறன் என்று பல்வேறு மனித ஆற்றலும் சங்கமிக்கும் இடம். ஒரு காட்சியை நம் கண்களுக்குள் ஒரு நொடி நேரம் மட்டும் செலுத்துவதற்காக, பல மணி நேரம் மூளையையும், உடல் உழைப்பையும் பலரும் தரவேண்டியிருக்கிறது.

நம் இளம் பிராயத்திலிருந்து நமக்குப் புலப்படாத பல திரைப்படப் புதுமைகளை பொத்தாம் பொதுவாக ‘கேமரா ட்ரிக்' என்று ஒரு வார்த்தையில் இட்டு அடைத்து விட்டு நகர்ந்து விடும் போக்கு இருக்கிறது.

கேமரா என்பது மோடி வித்தை காட்டும் கருவி அல்ல. அது கற்பனைத் திறனும், கலை அறிவும், தொழில்நுட்பமும் இணையும் சாத்தியக் கூறுகள் கொண்ட தெய்வாம்ச வடிவம். இந்தியத் திரையுலகம் நூறு வயதைக் கடந்து விட்டது. தமிழ்த் திரையுலகம் நூறை நெருங்குகிறது. என்றாலும் திரைத்துறையின் அத்துணை தொழில்நுட்பங்களையும் விளக்கும் முறையான நூல்கள் போதுமான அளவு பரவலாக வந்திருக்கின்றனவா என்றால் இல்லை என்பது தான் சோகம். பிலிம்களைப் பயன்படுத்தும் கேமராவின் தொழில்நுட்பம் குறித்து இரண்டாண்டுகளுக்கு முன்புதான் ‘அசையும் படம்' என்ற நூல் வந்தது. அதை எழுதிய இளம் ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமார், சமீபத்தில் டிஜிட்டல் கேமரா ஒளிப்பதிவு தொழில்நுட்பம் குறித்து ‘பிக்சல்' என்ற நூலை எழுதியிருக்கிறார்.

இரண்டு விஷயங்களுக்காக இந்த நூல் எழுதிய சி.ஜெ.ராஜ்குமாரை பாராட்ட வேண்டும். ஒன்று, டிஜிட்டல் தொழில்நுட்பம், ஒளிப்பதிவுத் துறையில் அறிமுகமான சமகாலத்திலேயே இந்த நூலை வெளியிட்டதன் மூலம், இன்றைய இளம் கலைஞர்களுக்கு உடனடியான கையேடாக இது பயன்படும். இரண்டாவதாக, ஏற்கனவே பிலிம் தொழில்நுட்பம் குறித்து அவரே விரிவாக ‘அசையும் படம்' என்ற நூலை எழுதியிருப்பதால் இரண்டுக்குமான வேறுபாடு, தொழில்நுட்ப சாத்தியங்கள் மற்றும் அவசியம் குறித்த சந்தேகங்களை எளிதாக நிவர்த்தி செய்ய வழிப்படுத்தி இருப்பது.

நவீன அறிவியல் வளர்ச்சி எல்லா நுட்பங்களையும் எளிதாக்கி நம் விரல்களுக்குள் ஒப்படைத்து விடுகிறது. ‘பொத்தானை அமுக்கினால் படம்' என்ற மனப்போக்கில் படைப்பாக்கத் திறன் மற்றும் அதன் நுணுக்கமான விஷயங்களை ஒரு சிலர் தானாக தேடிச் செல்வதில்லை. அவர்களையும் இந்த நூல் தூண்டுகிறது. ஒரு ஆரம்ப நிலை மாணவன் வாசித்தால் மிகச் சுலபமாக வேரிலிருந்து உச்சிவரை முன்னகர்ந்து செல்லும் வகையில் இந்த நூல் வடிவமைக்கப்பட்டிருப்பது நூலின் கூடுதல் சிறப்பு. இந்த நூலை திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் மட்டுமல்ல; பொழுதுபோக்காக டிஜிட்டல் கேமராவை கையாள முனைபவர்களும் வாசிக்க வேண்டும்.

உதாரணமாக, ஐ.எஸ்.ஓ. எண்கள் 100-லும், 800-லும் படம் பிடிக்கப் பட்ட காட்சிகளில் மாறுபடும் துல்லியம் குறித்து படங்கள் மூலம் விளக்கியிருக்கிறார். வழக்கமாக டிஜிட்டல் கேமராவை வாங்குவதற்கு நீங்கள் மிகச் சிறந்த கடைக்குச் சென்றாலும், அங்கிருக்கும் கேமரா விற்பனையாளர் மெனு பட்டியலைப்பற்றி மிக வேகமாக ஒப்பித்து விட்டு, கடைசியில் ‘அது பற்றியெல்லாம் நீங்கள் கவலைப் பட வேண்டாம். இதில் auto என்றொரு option இருக்கிறது. அதை நீங்கள் தேர்வு செய்து விட்டால் போதும்' என்று நம்மை ஆசுவாசப் படுத்தி விடுவார். ஆனால், அந்த மெனுப் பட்டியலில் நமது படைப்பாக்கத் திறனை வெளிப்படுத்தும் பலவித options இருக்கின்றன என்பதை கையாளுபவர்கள் முயற்சிக்காமலேயே போய்விடும் அபாயம் இருக்கிறது. பிக்சல் நூலை வாசிப்பவர்கள் காட்சிகளை பதிவு செய்யும் கருவியல்ல நாம்; ‘கலைஞர்கள்' என்பதை உணர்வார்கள்.

பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை கணினியில் ஏற்றுவதற்கு உதவும் ‘கோடக்' பற்றி பிக்சல் வழியேதான் நான் அறிந்தேன். டிஜிட்டல் கேமராவைப் பொறுத்தவரை ஒளிப்பதிவு எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் நம் கணினி ஏற்றுவதற்காக தேர்வு செய்யும் மென்பொருள் மற்றும் அலகுகள் என்பதையும் இந்த நூல் சொல்லியிருக்கிறது.
ஒளிப்பதிவுத் துறையில் ரெசலியூஷன் என்பது சவாலான விஷயம் தான். சி.ஜெ.ராஜ்குமார் மிகச் சரியான அட்டவணை ஒன்றை இந்த நூலில் தருகிறார். அதில், கேமரா வகை / ரெசலியூஷன் / சென்சார் அளவு / கோடக் ஆகியவற்றின் பொருத்தமான அலகுகளை சுருக்கமாகத் தருகிறார்.
இன்றைக்கு 5D தொழில்நுட்பம் மூலம் ஒளிப்பதிவு செய்யப் பட்ட திரைப்படங்கள் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது எதிர்கொள்ளும் சில பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் தன் அனுபவங்களின் வாயிலாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

கேமராக்களின் வகைகளையும் லென்சுகளின் வகைகளையும் மிக அழகாகத் தொகுத்திருக்கிறார். சகல தொழில்நுட்ப வசதிகளையும் உள்ளடக்கி 75 கிராமில் ஒரு கேமரா இருப்பதை (Go Pro Hero 3) வாசித்த போது ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் வேறொரு பக்கத்தில் இரண்டு கிலோ எடையில் லென்ஸ் ஒன்று இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். இதைப் படிக்கின்றபோது தொழில் நுட்பத்தின் விசித்திர ஜாலங்கள் வியப்பின் எல்லைக்கே இட்டுச் செல்கின்றன.
கேமராவின் சகல உபகரணங்களைப் பற்றியும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எடுக்கப் பட்ட திரைப்படங்கள் பற்றியும் அக்கறையோடு அறிமுகப்படுத்துகிறது இந்நூல்.
தெளிவான புகைப்படங்கள், பிழைகளற்ற அச்சாக்கம், பாதுகாக்கத் தகுந்த தாள்கள் என்று ஒரு தொழில் நுட்ப நூலின் தேவையறிந்து இந்த நூலைப் பதிப்பித்திருக்கிறார் டிஸ்கவரி வேடியப்பன். ‘அசையும் படம்' நூலை வடிவமைத்த அரவிந்த் குமார் குழுவினரிடம் இந்த நூலையும் வடிவமைக்கும் பொறுப்பை தந்தது புத்திசாலித்தனமானது. ஒரு இணை படைப்பாளியாகவே அவர்கள் இயங்கியிருக்கின்றனர்.
இயன்ற வரை அறிவியல் கலைச்சொற்களை அழகாக தமிழாக்கி பயன்படுத்தி இருப்பதற்கு ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் நன்றி தெரிவிப்பது கடமையாகிறது. உ-ம்: திரவப் படிகத் திரை (LCD), ஒளி அகலாங்கு(Exposure latitude). இந்த நூலின் பின்புலமாக இருக்கும் திருமதி.ராஜேஸ்வரி ராஜ்குமாருக்கு இந்த நூலை சமர்ப்பணம் செய்திருப்பது மிகப் பொருத்தமானது.

பிக்சல் என்பதை எப்படி தமிழாக்கலாம்?
‘துல்லியங்களின் மையம்' என்றா?
அல்லது, ‘புள்ளிகளின் துல்லியம்' என்றா?
எப்படியிருந்தாலும் துல்லியமான அறிவோடு ஒரு தொழில்நுட்பக் கருவியை கற்பனைத் திறம் மிக்க ஒரு படைப்பாளி கையாளும் போது தமிழில் திரை இலக்கியம் தோன்றுவதற்கான சாத்தியக் கூறுகளை அதிகப்படுத்தும் துவக்கப் புள்ளியாக இந்த நூலைக் கருதலாம். ஒளிப்பதிவுக் கருவியை கையாள்பவர்களுக்கு மட்டுமல்ல; திரைத் துறையின் பல்வேறு தொழில்நுட்பப் பிரிவுகளைச் சார்ந்தவர்களையும் அவரவர் துறையில் சமகால தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நூல் எழுதுவதற்கு ‘பிக்சல்' தூண்டுகோலாக அமையும். அந்த வகையில் பிக்சல், ‘துல்லியங்களின் மையம்' எனலாம்.

இந்த நூலை வாசித்த ஒளிப்பதிவு மேதை திரு.பாலுமகேந்திரா ‘தலைமுறைகள்' படத்தை எடுப்பதற்கு முன்பே இந்த நூல் வெளிவந்திருந்தால் இன்னும் சிறப்பாக ‘தலைமுறைகள்' படத்தை எடுத்திருப்பேன் என்றாராம். அதனால் என்ன ‘இனி வரும் தலைமுறைகளுக்கான நூல் இது' என்று பாலுமகேந்திரா அடையாளப்படுத்துவதாகவும் கொள்ளலாம்.

நூல் பெயர்: பிக்சல்
ஆசிரியர்: சி.ஜெ.ராஜ்குமார்
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கங்கள்: 175
விலை: 230/-